ஆண்டிபட்டி: தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கியுள்ளதால், காற்றாலைகளில் ஒரு நாள் மின் உற்பத்தி 8 ஆயிரம் யூனிட் ஆக உயர்ந்துள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சுற்றியுள்ள கணேசபுரம், முத்துசங்கிலிபட்டி, ஆசாரிபட்டி, நல்லமுடிபட்டி, ஒக்கரைபட்டி, ஜி.உசிலம்பட்டி, கண்டமனூர், ஆத்தங்கரைபட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் தனியார் மூலம் 500க்கும் மேற்பட்ட காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை ஆண்டிபட்டி, ராஜதானி, கண்டமனூரில் செயல்படும் துணை மின் நிலையத்திற்கு சப்ளை செய்கின்றனர். இதற்காக அரசிடமிருந்து யூனிட் வீதம் பணம் பெற்றுக் கொள்கின்றனர்.
கேரளாவில் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கும். அதற்கு முன், மே மாத இறுதியில் தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கும். இதன்படி, கடந்த 4 நாட்களாக தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று பலமாக வீசத் தொடங்கியுள்ளது.