சிவப்பு மண்டலமாக உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் பணி தொடங்கியது

செங்கல்பட்டு: தமிழகம் முழுவதும் 44 சுங்கச்சாவடிகள் உள்ளன. கொரோனா ஊரடங்கு உத்தரவால் கடந்த 2 மாதங்களுக்கு முன் அனைத்து சுங்கச்சாவடிகளும் மூடப்பட்டன. தற்போது, ஊரடங்கில் சில தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டு, கடந்த மாதம் 20ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க, மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இதற்கிடையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்ததால் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இதனால் பரனூர், ஆத்தூர் ஆகிய சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கவில்லை. வாகனங்கள், கட்டணமின்றி சென்று வந்தன.

இந்நிலையில் நேற்று காலை முதல் மேற்கண்ட 2 சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்கும் பணி தொடங்கியது. பரனூர் சுங்கச்சாவடியில் மட்டும் தினமும் இரண்டரை லட்சம் முதல் 3 லட்சம் வரை வாகனங்கள் சென்று வருகின்றன. இதையொட்டி, ஏராளமான வாகனங்கள் வரிசைக்கட்டி நின்றன. இந்த சுங்கச்சாவடியில் ஒரு ஷிப்டுக்கு 100 பேர் வேலை செய்கின்றனர். இதனால் சமூக தொற்று பரவ வாய்ப்புள்ளது என வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Related Stories: