புதுச்சேரி: புதுச்சேரி கிராமப்புற பகுதிகளில் வீடுகளில் மீட்டர் பொருத்தாமல் தண்ணீரை பயன்படுத்துவோரின் விபரங்களை கணக்கெடுக்கும் பணியில் கொம்யூன் பஞ்சாயத்துக்கள் தீவிரமாக இறங்கி வரிகளை வசூலிப்பதில் கெடுபிடி காட்டி வருகின்றன. புதுச்சேரியில் நகர பகுதியை தவிா்த்து வளர்ந்து வரும் பகுதிகளான வில்லியனூர், தவளகுப்பம், கிருமாம்பாக்கம், கூடப்பாக்கம், மடுகரை உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இங்கு கடந்த 5 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் குடிபெயர்ந்துள்ள நிலையில், ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் பொதுப்பணித்துறை தண்ணீர் இணைப்புகளை பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் இவர்களுக்கான குடிநீர் பயன்பாடுகளை கண்டறியும் வகையில் மீட்டர்கள் பொருத்தப்படாமல் இருந்தன. தற்போது அரசு விநியோகிக்கும் தண்ணீரை தேவையில்லாமல் பலர் விரயம் செய்வதாக பொதுப்பணித்துறையின் நீர்ப்பாசன கோட்டத்துக்கு புகார்கள் சென்றன.