புதுடெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு கூடுதலாக 40,000 கோடி ஒதுக்கிய பிரதமர் மோடியின் நடவடிக்கையை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கிண்டலடித்துள்ளார். முதல்முறை பிரதமராக பதவியேற்ற பின்னர், கடந்த 2014ல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மோடி, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தோற்றுப்போன காங்கிரஸ் அரசின் நினைவுச் சின்னம் என்று குறிப்பிட்டு பேசினார். கடந்த வாரம் கொரோனா பாதிப்பினால் நலிவடைந்த பொருளாதாரத்தை புதுப்பிக்க அறிவிக்கப்பட்ட பொருளாதார ஊக்குவிப்பு நிதி அறிவிப்பில் இத்திட்டத்துக்காக ஏற்கனவே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள ₹61 ஆயிரம் கோடியுடன், கூடுதலாக 40 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.