சென்னை: தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் ஆன்லைன் வாயிலாக தினமும் 500 பக்தர்களுக்கு இ-பாஸ் வழங்கி தரிசனம் செய்ய அனுமதி வழங்கலாமா என்பது குறித்து அறநிலையத்துறை ஆலோசித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுபடுத்தும் வகையில் கோயில்களுக்கு பக்தர்கள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவுவதை கட்டுபடுத்த பிறப்பித்த ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை ஜூன் 1ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பது தொடர்பாக அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
அப்போது ஜூன் 1ம் தேதிக்கு பிறகு கோயில்களில் தரிசனத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உடன் திறக்க அரசிடம் அனுமதி கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, மாநிலம் முழுவதும் முக்கிய கோயில்களில் ஆன்லைன் மூலம் பாஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 500 பேர் வீதம் கோயில்களில் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள், அந்த பாஸில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் தான் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். இது தொடர்பாக அரசுக்கு கமிஷனர் பணீந்திர ரெட்டி பரிந்துரை செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு அரசு அனுமதி கிடைத்தவுடன் திருப்பதி போன்று முக்கிய கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு பாஸ் வழங்கப்படுகிறது.
இது குறித்து அறநிலையத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘சமூக இடைவெளியை கடைபிடித்து தரிசனம் செய்ய அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பிரச்னை முடிவுக்கு வரும் வரை இந்த நிலை தொடரும’ என்றார். மேலும் இது குறித்து பொதுமக்கள் சிலர் கூறும் போது, கோயில்களுக்கு வசதி படைத்த பக்தர்கள் மட்டும் தரிசனம் செய்வதற்கு வழிவகுக்காமல், ஏழை எளிய பக்தர்களும் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கட்டணமில்லா சேவையாக அது இருக்க வேண்டும்’ என்றார்.