சென்னை : உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது. கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுபானம் வாங்க ஞாயிறு முதல் சனி வரை வண்ண டோக்கன்கள் வழங்க டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.குறிப்பிட்ட வண்ண டோக்கன் உள்ளவர்கள், குறிப்பிட்ட நாளில் டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கிக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம், டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவுக்கு தடை விதித்தது. இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம், மதுக்கடைகளை திறப்பதற்கான பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. சமூக விலகலை கடைபிடித்து, கூட்ட நெரிசலை தடுத்து கொரோனா பரவாமல் இருக்கும் வகையில் விற்பனைக்கான வழிவகைகளை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.