மேட்டூர்: கேரளா மாநிலத்தில் இருந்து பீகார் மற்றும் உத்தர பிரதேசத்துக்கு நடந்தே செல்ல முயன்ற பெண் உள்பட 27 தொழிலாளர்களை, மேட்டூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். கேரள மாநிலம் மன்னார்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள டீக்கடைகள், பேக்கரிகள் மற்றும் ஓட்டல்களில் நூற்றுக்கணக்கான பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். ஊரடங்கு காரணமாக வேலை இழந்த அவர்களை பராமரிக்க முடியாததால், அவர்கள் வேலை செய்து வந்த ஓட்டல் மற்றும் பேக்கரி நிர்வாகங்கள், ஒரு பெண் உள்பட 27 தொழிலாளர்களை, மன்னார்காடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனால், அவர்களுக்கு போலீசார் எவ்வித உதவியும் செய்யவில்லை. இதையடுத்து, தங்கள் சொந்த மாநிலத்துக்கு செல்வதாக தொழிலாளிகள் கூறியுள்ளனர். இதையடுத்து போலீசாரும் அவர்களை அனுப்பி வைத்தனர்.