நெல்லை: தமிழ்நாடு தனியார் நர்சரி பிரைமரி, மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் செயல்படும் தனியார் பள்ளிகளில் சுமார் 50 ஆயிரம் பஸ், வேன்கள் இயங்கி வருகிறது. இந்த வாகனங்களுக்கு எப்சி செய்ய சாலை வரி, இருக்கை வரி, இன்சூரன்ஸ் கட்ட மத்திய, மாநில அரசுகள் ஜூன் 30ம் தேதி வரை விதிவிலக்கு வழங்கி அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அனைத்து பள்ளி நிர்வாகிகளையும் தொலைபேசியில் அழைத்து பள்ளி வாகனங்களுக்கான சாலை வரி இருக்கை வரியை கட்டச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். தமிழக அரசு போட்டுள்ள இந்த ஆணை தங்களுக்கு வரவில்லை என்றும், கணினியில் 30.06.2020 வரை விதிவிலக்கு வழங்கியதற்காக மாற்றப்படவில்லை. எனவே எங்களால் ஏற்க முடியாது என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எச்சரித்து உடனே அனைத்து வரிகளையும் கட்டப்பட வேண்டும். இல்லை என்றால் அபராதம் விதித்து வசூலிக்க நேரிடும் என்று மிரட்டுகிறார்கள்.