வேலியே பயிரை மேயும் அவலம் பெண் காவலரிடம் ஆபாசமாக பேசும் நெல்லை எஸ்ஐ : சமூக வலைதளங்களில் பரவுகிறது

நெல்லை: நெல்லை போலீஸ் எஸ்ஐ ஒருவர் தன்னுடன் வேலை பார்த்த பெண் காவலரிடம் செல்போனில் ஆபாசமாக பேசும் உரையாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் சமூக வலைதளங்களில் ஒரு ஆடியோ உரையாடல் வேகமாக பரவி வருகிறது. அதில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் எஸ்ஐ ஒருவர் உடன் பணியாற்றும் திருமணமாகாத பெண் காவலரிடம், நீ தனியாக தங்கி இருக்கும் போலீஸ் குடியிருப்பின் அருகேயுள்ள வீடுகளில் யாரும் இல்லை. எல்லோரும் வெளியூர் சென்றுள்ளனர். எனவே நீ மட்டும் தான் அந்த பகுதியில் தனியாக இருக்கிறாய். நான் இரவில் உன் வீட்டிற்கு வருகிறேன். நீ கதவை மட்டும் திறந்து வை என கூறுகிறார்.

இதற்கு அந்த பெண் காவலர் எஸ்ஐயிடம் ‘வேண்டாம் சார், சாரி, சார் எனக்கு பயமாக இருக்கிறது. நான் அந்த மாதிரி பெண் இல்லை’ என்று கூறுகிறார். ஆனால் அதற்கு அவர், நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன். 10 நிமிடத்தில் அல்லது அரை மணி நேரத்தில் வெளியே சென்று விடுவேன். சத்தியமாக ஒன்றும் நடக்காது, என்னை நம்பு. இதனை வேறு யாரிடமும் கூறக்கூடாது என்கிறார். இதற்கு அவர் தொடர்ந்து மறுக்கிறார். ஆனால் எஸ்ஐ விடாப்பிடியாக தொடர்ந்து எனக்கு உன்னை பிடித்து இருக்கிறது. அதனால் தான் கேட்கிறேன் மறுக்காதே என கட்டாயப்படுத்துகிறார்.  போலீஸ் ஸ்டேஷனில் வேறு யாரும் இல்லை. நான் மட்டும் தான் உள்ளேன். அதனால் வெளியே சென்று வருவது போன்று உன் வீட்டிற்கு வருகிறேன் என்கிறார். பெண் காவலர் எவ்வளவோ சமாளித்தும் எஸ்ஐ விடுவதாக இல்லை.

கடைசியில் அந்த பெண் காவலர் அழாத குறையாக, சார் சிறிது நேரம் கழித்து பேசுகிறேன் என்கிறார். ஆனால், எஸ்ஐ வேறு யாரிடமும் இதுபற்றி வாய்திறக்கக்கூடாது என மிரட்டும் தொனியில் பேசுகிறார். அதற்கு பெண் காவலர்  ‘சத்தியமா நான் வேறு யாரிடமும் சொல்ல மாட்டேன்’ என கெஞ்சுகிறார். இத்துடன் அந்த உரையாடல் முடிகிறது. இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, சம்பந்தப்பட்ட எஸ்ஐ திருச்சியில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு பணியாற்றிய போது அங்கு பணியில் இருந்த பெண் காவலரிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய விவரம் தெரிய வந்துள்ளது.

பின்பு அங்கிருந்து நெல்லைக்கு மாறுதலாகி வந்த எஸ்ஐயிடம், பெண் காவலரின் புகார் குறித்து விசாரணை நடந்தது. ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது. இதனிடையே அந்த எஸ்ஐயும், பெண் காவலரும் 4 நிமிடம் பேசிய செல்போன் உரையாடல் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேற்று முதல்  ேவகமாக பரவி வருகிறது.

Related Stories: