எடப்பாடி தொகுதியில் 90 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச நிவாரண பொருட்கள் விநியோகம்: ஊரடங்கு நேரத்தில் முதல்வர் உத்தரவு

சென்னை: ஊரடங்கு அமலில் உள்ள சூழ்நிலையில் எடப்பாடி தொகுதியில் 90 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச நிவாரண பொருட்கள் வழங்குமாறு கட்சி நிர்வாகிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு  அரசு,  குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை மற்றும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் ஆகியவற்றை வழங்க உத்தரவிட்டதன்படி, தமிழ்நாடு முழுவதும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.  

மேலும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது ஊரடங்கு அமலில் உள்ள இச்சூழ்நிலையில், எனது எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அடங்கியிருக்கும் எடப்பாடி நகரம், எடப்பாடி ஒன்றியம் கொங்கணாபுரம் ஒன்றியம், நங்கவள்ளி ஒன்றியம்,  பூலாம்பட்டி பேரூராட்சி, கொங்கணாபுரம் பேரூராட்சி, ஜலகண்டாபுரம்  பேரூராட்சி, நங்கவள்ளி பேரூராட்சி மற்றும் வனவாசி பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய நடுத்தர  90 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, எனது சார்பில் விலையில்லா அரிசி சிப்பத்தை வழங்குமாறு,  அந்தந்த பகுதி கட்சி நிர்வாகிகளைக் கேட்டுக் கொண்டேன். நிகழ்ச்சிகளில், கட்சி சார்பில்  மூன்று நிர்வாகிகள் மட்டுமே முகக்கவசம் அணிந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் சமூக இடைவெளியை பின்பற்றி நிவராண உதவிகளை வழங்கி வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: