மேற்குவங்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மம்தா பானர்ஜி அநீதி செய்கிறார்: உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு

டெல்லி: வெளிமாநிலங்களில் சிக்கித்தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்துவர மேற்குவங்க அரசு ஒத்துழைக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார். நாடு முழுவதும் மீண்டும் மே 17ம் தேதி  வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் அந்த தேதி வரை மீண்டும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், வெளிமாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இதனையடுத்து,  மத்திய உள்துறை அறிவுறுத்தலின்படி வெளிமாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகளை மாணவர்கள் என பலரை அழைத்து வர மட்டும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

மாநிலங்களின் விதிகளை பின்பற்றி அழைத்து வரப்படுவார்கள், அனைத்து சோதனைகளும் முடித்து தனித்தனியாக பாதுகாப்பாக அழைத்து வரப்படுவார்கள். யாரேனும் வர வேண்டி இருந்தால், சம்பந்தப்பட்ட அரசை தொடர்பு கொள்ள வேண்டும்.  மேலும், அத்தியாவசிய சரக்கு ரயில்கள் எப்போதும் போல் இயக்கப்பபட்டு வருகிறது. இந்நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எழுதிய கடிதத்தில் பல்வேறு மாநிலங்களில் சிக்கி  தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை திரும்ப அழைப்பது குறித்து மேற்குவங்க அரசு, போதுமான ஒத்துழைப்பை வழங்கவில்லை.

ரயில்வே துறை இயக்கும் சிறப்பு ரெயில்களை மாநிலத்திற்குள் மேற்கு வங்க அரசு அனுமதிக்கவில்லை. இது மேற்குவங்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அநீதியாகும். இது அவர்களுக்கு மேலும் கஷ்டங்களை உருவாக்கும். கொரோனா  வைரஸ் சோதனையில் மக்கள் தொகையின் விகிதத்தில் மிகக்குறைந்த பரிசோதனை விகிதத்தையே மேற்குவங்கம் கொண்டுள்ளது. அங்கு இறப்பு விகிதமும் 13.2 சதவீதம் என உயர்வாக உள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கு மத்தியில்  இதுவரை இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் வீடு திரும்புவதற்கு மத்திய அரசு உதவி உள்ளது என்று கடிதத்தில் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Related Stories: