திருவொற்றியூர்: மாதவரம் ஆவின் பால் நிறுவனத்தில் மேலும் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாதவரம் பால் பண்ணையில் உள்ள ஆவின் நிறுவனத்தில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பால் உற்பத்தி, பால் பாக்கெட் ஏற்றுதல், இறக்குதல் மற்றும் பதிவேடு பராமரித்தல் போன்ற பணிகளில் மூன்று ஷிப்ட்களில் வேலை செய்து வருகின்றனர். கடந்த 2 தினங்களுக்கு முன், இங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, சக ஊழியர்களுக்கு பரிசோதனை செய்தபோது, நேற்று முன்தினம் மேலும் ஒரு ஊழியருக்கு நோய் தொற்று உறுதியானது. இதனால், பீதியடைந்த சக ஊழியர்கள் பெரும்பாலானோர் கடந்த 3 நாட்களாக வேலைக்கு வரவில்லை. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தினசரி காலை 5 மணிக்கு கிடைக்க வேண்டிய பால் பாக்கெட்கள் தற்போது காலை 7 மணிக்கும், 9 மணிக்கும் கிடைக்கிறது.