சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு தமிழகத்தில் அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா மற்றும் இதயம் உள்ளிட்ட முக்கிய சிகிச்சைகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் கடும் பீதியில் இருந்து வருகின்றனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க இடம் இல்லாமல் அரசு மருத்துவமனைகள் திணறி வருகின்றன. இதனால் கல்லூரி, பள்ளிகள் உள்பட பல்வேறு இடங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
அப்படி இருக்கும் சூழ்நிலையில் கொரோனாவாவில் “ஏ” பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் இருந்து சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அது மட்டுமல்லாமல் கொரோனா நோய் பாதிக்கப்பட்டு மூச்சு திணறல், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று திடீரென தமிழகத்தில் உள்ள சிறிய, பெரிய அரசு மருத்துவமனைகள் நேற்று வழக்கம் போல் இயங்க தொடங்கின. அதாவது, காய்ச்சல், தலைவலி, எலும்பு, சர்க்கரை நோய் உள்ளிட்ட அனைத்து வகை பொது நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏற்கனவே, அந்தந்த பிரிவுகளில் சிகிச்சை அளித்து வந்த டாக்டர்கள் அனைவரும் வந்து சிகிச்சை அளித்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.