திருமங்கலம்: திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் முதல்முறையாக பக்தர்கள் இன்றி திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது திருமங்கலத்தில் புகழ்பெற்ற மீனாட்சி சொக்கநாதர் கோயில் அமைந்துள்ளது. மதுரை மீனாட்சியம்மனுக்கு திருமாங்கல்யம் தயார் செய்து திருக்கல்யாணத்திற்கு அனுப்பிய பெருமை கொண்டதால் இந்த ஊருக்கு திருமாங்கல்யம் என்ற பெயர் வந்தது. பின்னர் இப்பெயர் மருவி நாளடைவில் திருமங்கலமாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் இக்கோயிலில் சித்திரை மாதத்தில் மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனா தடுப்பு ஊரடங்கு அமலில் உள்ளதால் இந்த ஆண்டு திருக்கல்யாணம் நேற்று கோயிலில் எளியமுறையில் நடைபெற்றது. சங்கரநாராயணபட்டர் தலைமையில் ஐந்து சிவாச்சாரியர்கள் மட்டுமே கலந்து கொண்ட இத்திருக்கல்யாணத்தில் மீனாட்சியம்மன் பச்சை பட்டுத்தியும், சொக்கநாதர் வெண்மைபட்டு உடுத்தியும் மணக்கோலத்தில் காட்சியளித்தனர்.