செய்யாறு: செய்யாறு அருகே கொரோனாவுக்கு அஞ்சாமல் ஏரியில் இறங்கி பொதுமக்கள் மீன் பிடித்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் வாகனங்களையும் விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். இந்தியாவில், ஊரடங்கு மே 17ம் தேதி வரை உள்ளது. இதனால், பொதுமக்கள் யாரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த காழியூர் கிராமத்தில் உள்ள ஏரியில் நீர் வற்றி சிறிதளவே உள்ளதால் அதில் உள்ள மீன்களை பிடிக்க செய்யாறு சுற்றுவட்டார பகுதிகளான காழியூர், அத்தி, புளியரம்பாக்கம், வெங்கட்ராயன்பேட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 500 பொதுமக்கள் சிறுவர்களோடு குடும்பம், குடும்பமாக நேற்று ஏரியில் மீன் பிடித்தனர்.