துணி துவைக்க சென்றபோது ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாப பலி: ஒருவருக்கு தீவிர சிகிச்சை

சென்னை: குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மணிமங்கலம் பகுதியில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் பொதுமக்கள் குளித்தும், துணி துவைத்தும் வருகின்றனர்.  இந்நிலையில் நேற்று காலை மணிமங்கலம் - கரசங்கால் சாலை பழத்தோட்டம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சித்ரா (35), திலகா (40) இவரது மகள்கள் பூர்ணிமா (8), கலையரசி (16), சத்யா (13) ஆகியோர் இந்த ஏரியில் துணி துவைக்க சென்றுள்ளனர்.

அங்கு, சித்ரா மற்றும் திலகா ஆகியோர் ஏரிக்கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்தனர். சிறுமிகள் மூவரும் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் விளையாடிக் கொண்டே ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றனர்.

நீச்சல் தெரியாததால் சிறுமிகள் கொஞ்சம் கொஞ்சமாக நீரில் மூழ்கி தத்தளித்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த திலகா, சித்ரா ஆகியோர் அலறி கூச்சலிட்டபடி அவர்களை காப்பாற்றுவதற்காக ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றனர். இவர்களுக்கும் நீச்சல் தெரியாத காரணத்தால் குழந்தைகளுடன் சேர்ந்து நீரில் மூழ்கினர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து, 5 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சித்ரா மற்றும் சிறுமிகள் பூர்ணிமா, கலையரசி, சத்யா ஆகியோர் செல்லும் வழியிலேயே இறந்தனர். திலகாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: