கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் மர்ம சாவு

சென்னை: வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி, சிஎம்சி காலனியை சேர்ந்த பிரதிபா (22), கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்துவிட்டு பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். தற்போது, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் பணிபுரிந்து வந்த பிரதிபா, நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தூங்க சென்றார். நேற்று காலை  நீண்ட நேரமாகியும் எழுந்திருக்கவில்லை. சக மாணவிகள் எழுப்பியும் எழுந்திருக்கவில்லை.உடனே இதுபற்றி கல்லூரி மருத்துவர் வசந்தாமணிக்கு  தகவல் கொடுத்தனர். அவர், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், துணை கமிஷனர் மனோகரன், உதவி கமிஷனர் ராஜா, இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் ஆகியோர் விடுதிக்கு வந்து, பிரதிபா இறந்தது தெரிந்தது.

அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரதிபா சிறப்பு வார்டில் பணியாற்றியதால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா இல்லை என்று தெரிய வந்தது. அவர், விஷம் அருந்தியதற்கான அறிகுறியும் இல்லை. பிரேத பரிசோதனைக்குப் பின்பு தான் பிரதிபா இறந்ததற்கான முழு விவரம் தெரியவரும் என போலீசார் கூறினர். பிரேத பரிசோதனைக்கு பின்பு அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருவொற்றியூர்: மணலி மண்டலத்துக்கு உட்பட்ட அப்போலோ ஆம்ஸ்ட்ராங் நகரை சேர்ந்த டாக்டர் ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்,  கோயம்பேடு மார்க்கெட்டில் கிளினிக் நடத்தி வருகிறார். இவரது குடும்பம் சேலத்தில் உள்ளது. இவர் மட்டும் இங்கு வசித்து வந்தார். தற்போது, இவரை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Related Stories: