ஈரோட்டை தொடர்ந்து கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியது தூத்துக்குடி; புதிதாக யாரும் பாதிக்கவில்லை...மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

தூத்துக்குடி; ஈரோடு மாவட்டத்தை தொடர்ந்து கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாறியுள்ளது. இந்தியா உட்பட 210 நாடுகளுக்கும் மேலாக பரவியுள்ள கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.  இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,043 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 1147 பேர் உயிரிழந்த நிலையில், 8889 பேர்  கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கிடையே, இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 2323 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1258 பேர்  குணமடைந்துள்ளனர்.இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டம் மாறியுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஏற்கனவே 26 பேர் கொரோனா  பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் ஒரு பெண் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறுதியாக சிகிச்சை பெற்ற நபரும் இன்று  குணமடைந்து வீடு  திரும்பினார்.

இதன்மூலம் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி உருவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கொரோனாவை வென்றுள்ளது பொதுமக்கள் மத்தியில்  மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட மாநிலங்களின் பட்டியலில் ஈரோடு மாவட்டத்தை தொடர்ந்து தூத்துக்குடி சேர்ந்துள்ளது. தமிழகத்தில், இதுவரை, கொரோனாவால் பாதிக்கப்படாத  மாவட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: