வாலாஜாபாத்: வாலாஜாபாத் அருகே சிறுபாகல் கிராமத்தை சேர்ந்தவ முருகன். இவருக்கும், காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், தற்போதுஊரடங்கு அமலில் உள்ளதால், திருமணம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து மணமக்களின் பெற்றோர்கள், முக்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்று மாப்பிள்ளை வீட்டில் திருமணம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி, நேற்று காலை, முருகன் வீட்டில் குறைந்த உறவினர்களுடன் எளிமையாக திருமணம் முடிந்தது. இதையடுத்து, மணப் பெண் வீட்டுக்கு, மாப்பிள்ளை அடிவைக்க வேண்டும் என்பது ஐதீகம். அப்போது உறவினர்கள் படைசூழ செல்வார்கள் ஆனால், நேற்று திருமணம் முடிந்ததும், மணமகன் முருகன், தனது மனைவியுடன் முதல்முறையாக மாமியார் வீட்டில் அடி வைக்க, உறவினர் யாரும் இல்லாமல், மொபட்டில் மனைவியுடன் புறப்பட்டார்.