மது பாட்டில் கொள்ளை போவதை தடுக்க திருமண மண்டபங்கள், குடோனில் சிசிடிவி கேமரா: டாஸ்மாக் நிர்வாகம் முடிவு

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் முழுவதும் மூடப்பட்டன. இதையடுத்து கடைகளில் உள்ள மதுபானங்களை பாதுகாக்கும் விதமாக குடோன்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு இடமாற்றம் செய்ய மாவட்ட மேலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நிர்வாகம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் மதுவகைகளை இடமாற்றம் செய்யும் பணி துரிதப்படுத்தப்பட்டது. இந்நிலையில், பல இடங்களில் மது வகைகளை இடமாற்றம் செய்யும் பொழுது அதிகாரிகள் உடந்தையுடன் ஊழியர்கள் மது வகைகளை எடுத்துச்சென்றனர். இதேபோல், கடைகளில் பூட்டை உடைத்தும், சுவரில் துளையிட்டும் மதுபானங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஊழியர்கள் உடந்தையாக இருந்ததாக புகார் எழுந்தது.

இதன்அடிப்படையில் விசாரணை நடந்து வந்தது. இதையடுத்து அவர்களை டாஸ்மாக் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இதேபோல் குடோன்கள் மற்றும் திருமண மண்டபங்களில் போலீசார் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் 24 மணி நேரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மதுபானங்கள் கொள்ளை போவதை தடுக்க திருமண மண்டபங்கள் மற்றும் குடோன்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தவும் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Related Stories: