பெரம்பலூர்: ஊரடங்கு எதிரொலியாக அக்கா வீட்டில் தங்கியிருந்த 2 மகன்களை அழைத்து கொண்டு தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து, விழுப்புரம் மாவட்டம் வரை 200 கிமீ தூரத்திற்கு சைக்கிளில் பயணம் செய்த கரும்பு வெட்டும் தொழிலாளிக்கு பெரம்பலூரில் சமூக ஆர்வலர்கள் உணவு வழங்கி வழியனுப்பினர். விழுப்புரம் மாவட்டம் சிறு மதுரை கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி(39). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவரது மகன்கள் சபரேஷன்(11), யுவராஜ்(9). இருவரும் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள தங்கமணியின் அக்கா வீட்டில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக தனது மகன்களை ஊருக்கு அழைத்து வர தங்கமணி முடிவு செய்தார்.