சென்னை: தமிழ் திரைப்பட துறையை சேர்ந்த நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று, நடிகர் ரஜினிகாந்துக்கு தயாரிப்பாளரும், நடிகருமான கே.ராஜன் கடிதம் எழுதினார். அதற்கு உடனே உதவ முன்வந்துள்ளார் ரஜினிகாந்த். இதுகுறித்து கே.ராஜன் விடுத்துள்ள அறிக்கை: கொடூரமான கொரோனா கிருமி தாக்குதல் காரணமாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களில் நூற்றுக்கணக்கானோர் பொருளாதார சிரமத்துடன் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். அவர்களுக்கு தயாரிப்பாளர்களில் சிலர் அரிசி மூட்டைகளும், பணமும் கொடுத்து உதவி செய்துள்ளனர்.ஒவ்வொரு உறுப்பினரின் குடும்பத்துக்கும் மேலும் இரண்டு மாதங்களுக்கு அத்தியாவசிய தேவைகள் அதிகம் என்பதால், அவர்களுக்கு உதவும்படி ரஜினிகாந்துக்கு கடிதம் எழுதினேன். பலபேரை வாழ வைத்தவர்கள், கொடுத்துப் பழகியவர்கள் தயாரிப்பாளர்கள். அவர்கள் இன்று பொருளாதார சிக்கலில் அவதிப்படுகின்றனர்.