ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிறுநீரக பாதிப்பால் சிகிச்சையில் இருந்த இன்ஸ்பெக்டர் மரணம்

சென்னை: சிறுநீரக பாதிப்பால் ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னை மாநகர பாதுகாப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சீனிவாச ராவ் நேற்று காலை உயிரிழந்தார். ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் சீனிவாச ராவ். இவர் தமிழக காவல் துறையில் கடந்த 1997ம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தவர். தற்போது சென்னை மாநகர பாதுகாப்பு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியில் இருந்த சீனிவாச ராவ் தலைமை செயலகம் மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் தற்போது ஆவடியில் உள்ள காவலர் குடியிருப்பில் மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.  கடந்த ஓராண்டுக்கு முன்பு சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட அவர், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

ஆனால் அவருக்கு மாற்று அறுவை சிகிச்சை சரியாக அமையாததால் கடுமையாக பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை பெற்று வந்த இன்ஸ்பெக்டர் சீனிவாச ராவ் நேற்று காலை 8.40 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கொரோனா நோய் தடுப்பு காரணமாக உறவினர்கள் தவிர்த்து யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.  அவரது உடல் உடனே அடக்கம் செய்யப்பட உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.  அவருடன் பணியாற்றிய போலீசார் அனைவரும் அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.

Related Stories: