விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூரை சேர்ந்தவர் ராஜேஷ். இவருடைய மனைவி தீபா (22). இவர்களது மகள் ஜஸ்மிதா(1), கடந்த மார்ச் 2ம் தேதி வீட்டில் கட்டிலில் படுத்து தூங்கியவள் திடீரென கீழே விழுந்து காயமடைந்தாள். உடனே குழந்தையை சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர். இந்நிலையில் ஜஸ்மிதா நேற்று குணமடைந்ததை தொடர்ந்து டாக்டர்கள், குழந்தையை வீட்டிற்கு அழைத்துச்செல்லலாம் என்று கூறினர். ஆனால் கொரோனா தடுப்புக்கான ஊரடங்கு உத்தரவால் வாகன வசதியில்லாததால் செய்வதறியாது தவித்தார். நடந்தாவது வீட்டிற்கு செல்வோம் என்று முடிவு செய்த தீபா, குழந்தையை தூக்கிக்கொண்டு புதுச்சேரியில இருந்து விழுப்புரம் நோக்கி நடந்தார். 22 கி.மீ. தொலைவில் உள்ள மதகடிப்பட்டில் குழந்தையுடன் தீபா நடந்து வருவதை பார்த்த ஒருவர், அவர்கள் இருவரையும் தனது காரில் ஏற்றி விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் இறக்கி விட்டுள்ளார். அங்கிருந்து கள்ளக்குறிச்சிக்கு மீண்டும் குழந்தையுடன் நடந்தே புறப்பட்டார்.