திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஏரிக்கரையில் உள்ள புதரில் பேரல்களில் பதுக்கி வைக்கப்பட்ட சாராய ஊறல் மற்றும் தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. இதையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தில் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை அமோகமாக நடக்கிறது. இதில், 110க்கு விற்கப்பட்ட குவாட்டர் பிராந்தி, தற்போது 700 வரையில் கள்ள சந்தையில் விற்பனையாகிறது. ஊரடங்கு உத்தரவால், வருமானம் இல்லாமல் தவிக்கும் குடிமகன்கள், அதிக விலை கொடுத்து மதுவை வாங்க முடியாமல், கள்ளச்சாராயம் குடிக்க தொடங்கியுள்ளனர். இதனால் உயிரிழப்புகளும் அதிகம் ஏற்படுகிறது. அதேபோல், மது கிடைக்காத விரக்தியில் சிலர் தற்கொலை செய்கின்றனர்.