சேலம்: ஊரடங்கு அமல் காரணமாக சேலத்தில் நிறுத்தப்பட்ட 5ரோடு மேம்பாலப்பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது. சேலத்தில் போக்குவரத்து நெரிசலை போக்க 5 ரோட்டை மையமாக கொண்டு ரூ440 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் சாரதா கல்லூரி சாலையில் ராமகிருஷ்ணா பிரிவு சாலையில் இருந்து ஏவிஆர் ரவுண்டானா வரை ஒரு பிரிவாகவும், ஓமலூர் சாலையில் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து குரங்குச்சாவடி வரை மற்றொரு பிரிவாகவும் பணி நடந்து வருகிறது. இதில் கடந்தாண்டு ஜூலையில் சாரதா கல்லூரி சாலையில் மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. ஓமலூர் சாலையில் புதிய பஸ் ஸ்டாண்ட், 4 ரோடு, 5 ரோடு, சொர்ணபுரி உள்ளிட்டங்களில் மேம்பாலப்பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் ஊரடங்கு அமலில் உள்ளது.