சென்னை: கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன், கடந்த மார்ச் மாதம் 19ம் தேதியில் இருந்தே சினிமாவின் அத்தனை பணிகளும் நிறுத்தப்பட்டது. தியேட்டர்கள் மூடப்பட்டது. பலநூறு பேர் பணியாற்றும் படப்பிடிப்புகள் முதல், ஒரு அறைக்குள் பணியாற்றும் எடிட்டிங் பணிகள் வரை அத்தனையும் நிறுத்தப்பட்டது. ஊரடங்கு காலத்திலும், பிறகு வரும் காலத்திலும் மிகப் பெரிய நஷ்டத்தை சந்திக்க இருப்பவர்கள் தயாரிப்பாளர்கள்தான். இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் செயலாளர் பைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன் கூறியதாவது:கோடை விடுமுறையில் எப்போதுமே 25 சதவீத வசூல் கூடுதலாக இருக்கும். அதை நம்பி பல சிறுபட்ஜெட் படங்கள் வெளியாகும். இப்போது அதற்கும் வழியில்லை. மாதம் ஒரு பெரிய படம் வெளியாகிறது. அதன் வசூலையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், மாதம் ஒன்றுக்கு சுமார் 150 கோடி ரூபாய் இழப்பை தயாரிப்பாளர்கள் சந்திக்கின்றனர். இந்த நிலமை சீராக 2 மாதங்களாகும் என்கின்றனர். ஒரு மாதத்தில் மட்டும் தயாரிப்பாளர்கள் தரப்பு 500 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது என்றார்.