சென்னை: கொரோனா வைரஸ் பீதி காரணமாக தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் வசித்து வந்த 374 ஆஸ்திரேலியர்கள் சென்னையிலிருந்து தனி சிறப்பு விமானத்தில் தங்களது நாட்டிற்கு திரும்பிச் சென்றனர். இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவின் தென் மாநிலங்களில் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றி வந்த ஆஸ்திரேலியர்கள், ஆஸ்திரேலியா தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குடும்பத்தினர் பலர் தங்கள் சொந்த நாடான ஆஸ்திரேலியா திரும்ப அந்நாட்டு அரசிடம் விருப்பம் தெரிவித்தனர். ஆனால் விமான சேவை இல்லாததால் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்திரேலியா நாட்டு தூதரக அதிகாரிகள், இந்திய அரசுடன் பேசி, தனி சிறப்பு விமானத்தில் அழைத்து செல்ல அனுமதி பெற்றனர்.