காவேரிப்பாக்கம்: காவேரிப்பாக்கத்தில் முட்புதரில் ஏடிஎம் கார்டு மற்றும் செருப்புடன் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் கோட்டை பெருமாள் கோயில் அருகே கோயிலுக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இது போதிய பராமரிப்பு இல்லாததால் தற்போது முட்புதர்கள் மண்டி காணப்படுகின்றது. இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலர் மேய்ச்சலுக்கு விட்டிருந்த பன்றியை தேடி முட்புதர் பகுதி வழியாக நேற்று சென்றனர். அப்போது முட்புதரில் மனித எலும்புகள் மற்றும் மண்டை ஓடு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, தகவல்அறிந்த இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன், பார்த்தீபன் மற்றும் போலீசார் வந்து எலும்புகள் மற்றும் மண்டை ஓடு ஆகியவற்றை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.