சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் சொகுசு கார் ஒன்று நீண்டநேரமாக நின்று கொண்டிருந்தது. இதை பார்த்து சந்தேகமடைந்த எழும்பூர் போலீசார் அங்கு சென்று கார் கதவை திறந்து பார்த்தபோது, உள்ளே ஒருவர் இறந்து கிடப்பது தெரிந்தது. இதையடுத்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், கார் பதிவு எண்ணை வைத்து விசாரித்தபோது, கீழ்ப்பாக்கம் பி.எச். சாலையை சேர்ந்த சமிந்திரன் (50) என்பதும், ஐடி நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றி வந்ததும் தெரிந்தது. இவர், மது போதைக்கு அடிமையானவர் என்பதால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அவரது மனைவி பிரிந்து சென்றதும் தெரியவந்தது. கார் ஓட்டி சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்தாரா அல்லது வேறு காரணமா என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.