சென்னை: தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று அனைத்து கமிஷனர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு கூடுதல் டிஜிபி ரவி உத்தரவிட்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி அனைத்து கமிஷனர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை: கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப பிரச்னைகள் உலக அளவில் அதிகரித்துள்ளதாக தேசிய பெண்கள் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய பெண்கள் ஆணையம் காவல் துறைக்கு தெரிவித்துள்ளது. தினமும் குடும்ப பிரச்னை காரணமாக மாநில காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு 25 அழைப்புகள் வருகிறது. மேலும், பெண்கள் உதவி எண் 1091க்கும் இதுதொடர்பான புகார்கள் வந்து கொண்டு இருக்கிறது. இந்த எண் எந்த பகுதியிலாவது வேலை செய்யவில்லை என்றால் சம்பந்தப்பட்ட போலீசார் அதை உடனே சரிசெய்ய வேண்டும். அழைப்புகளின்படி சம்பந்தப்பட்ட போலீசார் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார்கள் வரும் பகுதிகளில் மகளிர் போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.