டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்த வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் புழல் சிறையில் அடைப்பு: கொரோனா தொற்று எதுவும் இல்லை

சென்னை: டெல்லி மாநாட்டில் பங்கேற்று வந்ததை மறைத்த வங்கதேசத்தை சேர்ந்த மூன்று பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதியான நிலையில் நேற்று சிறையில் அடைத்தனர்.  டெல்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் கடந்த மாதம் 8ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்ற மாநாட்டில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.  அந்த கூட்டத்திற்கு பிறகு அனைவரும் தங்களுடைய சொந்த நாடுகள் மற்றும் மாநிலங்களுக்கு திரும்பிய பிறகு பலருக்கும் கொரோனா இருப்பதாக உறுதி செய்யப்பட்டதையடுத்து தமிழகத்தில் இருந்து எத்தனை பேர் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர் என்று கண்டறியப்பட்டது. அதில் மொத்தம் 1,131 பேர் கலந்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் அதில் 500க்கும் மேற்ப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டனர்.

ஆனால் மீதமுள்ள நபர்களை கண்டறிய முடியவில்லை என்றும் அவர்கள் வேறு இடத்துக்கு சென்று விட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் என்பதால் அவர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை அளிக்க வருமாறு தமிழக அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதையடுத்து மாநாட்டில் கலந்து கொண்ட பலர் தாமாகவே முன்வந்து சிகிச்சை பெற்று வந்தனர். இதையடுத்து அவர்கள் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து அவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்று கண்டறியப்பட்டு அவர்களும் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.  இந்நிலையில் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் அரசுக்கு தகவல் தெரிவிக்காமல், சிகிச்சைக்கும் அவர்களாகவே முன்வராமல் சென்னை பெரியமேடு பகுதியில் தங்கியிருந்துள்ளனர்.

இதையடுத்து அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தெரிய வந்தநிலையில் பெரியமேடு போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி பெரியமேடு போலீசார் அவர்கள் தங்கியிருந்த பகுதிகளுக்கு சென்று உரிய விசாரணை நடத்தி அவர்கள் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் மூன்று பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து பின்னர் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த 3 நபர்களையும் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் மூன்று பேருக்கும் கொனோரா சம்பந்தமான அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்ட நிலையில்  கொரோனா தொற்று எதுவும் இல்லை என்று உறுதியான நிலையில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர்

Related Stories: