அம்பத்தூர்: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மொபட்டில் பணிக்கு சென்ற பெண் காவலரை வழிமறித்து, 7 சவரன் தங்க சங்கலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அம்பத்தூர் அடுத்த ஒரகடம், அண்ணா தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி ஆஷா (37). இவர், திருமங்கலம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை இவர், வீட்டிலிருந்து மொபட்டில் பணிக்கு புறப்பட்டார். அம்பத்தூர் தொழிற்பேட்டை சாலை, பால் பண்ணை அருகில் சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த 2 பேர், ஆஷாவை வழிமறித்து, அவர் கழுத்தில் கிடந்த 7 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு, மின்னல் வேகத்தில் தப்பினர். இதனால், செய்வதறியாது தவித்த அவர் சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார். அதற்குள் ஆசாமிகள் தப்பி சென்றனர்.இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் ஆஷா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் பைக்கில் வந்து செயின்பறித்த 2 மர்ம நபர்களையும் தேடி வருகின்றனர்.