சென்னை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த 19ம் தேதி முதல் இந்தியா முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன. வரும் 14ம் தேதிக்கு பிறகும் தேசிய ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று தெரிகிறது. ஒருவேளை 14ம் தேதி ஊரடங்கு விலக்கப்பட்டாலும், சமூக விலகல் என்பது தொடர்ந்து அமலில் இருக்கும் என்று கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் முற்றிலும் விரட்டி அடிக்கப்படும் வரை, மூடப்பட்டுள்ள தியேட்டர்கள் திறக்கப்படும் வாய்ப்பு இல்லை என்கின்றனர். வரும் டிசம்பர் மாதம் வரை அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது தமிழ் திரையுலகில் 50க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. 70க்கும் மேற்பட்ட படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் உள்ளது.