சென்னை: ஊரடங்கினால் மலேசியாவில் சிக்கியுள்ள 350 இந்தியர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா நோய் பரவாமல் தடுக்க உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக உள்நாட்டு, சர்வதேச விமான சேவைகளும் உலகம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு சென்ற 350க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஊரடங்கினால், நீண்ட நாட்களாக அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா விசாவில் சென்ற பலரின் விசா காலம் முடிவடைந்த நிலையில் தங்களை இந்தியாவிற்கு அனுப்பி வைக்கும்படி மலேசிய தூதரகத்திற்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.