சென்னை: டெல்லி மாநாட்டில் பங்கேற்று வந்ததை மறைத்த வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் மீது சுகாதாரத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் படி போலீசார் 3 பேரை கைது ெசய்தனர். மேலும், அவர்களை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் தமிழகத்தில் இருந்து மொத்தம் 1,131 பேர் கலந்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் அதில் 500க்கும் மேற்பட்டவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டறிந்து தனிமைப்படுத்தியுள்ளனர். ஆனால் சிலரை மட்டும் கண்டறிய முடியவில்லை என்றும் அவர்கள் வேறு இடத்துக்கு சென்று விட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் என்பதால் அவர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை பெற வருமாறு தமிழக அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதையடுத்து மாநாட்டில் கலந்து கொண்ட பலர் தாமாகவே முன்வந்து சிகிச்சை பெற்று வந்தனர். இதையடுத்து அவர்கள் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து அவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்று கண்டறியப்பட்டு அவர்களும் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும் அவர்களை சுகாதாரத்துறை சார்பில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் கொரோனா வைரஸ் உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.