விழுப்புரம்: கொரோனா இல்லை என்று கூறி விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவர்களால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட டெல்லி வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மாயமான அவரை போலீசார் தேடுகின்றனர். டெல்லி பட்டேல் நகரை சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் கடந்த டிசம்பர் 10ம் தேதி புதுச்சேரியில் நடந்த நேர்முக தேர்வுக்கு வந்துள்ளார். பின்னர் சாலை விபத்தை ஏற்படுத்தியதாக புதுச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டு கடந்த 16ம் தேதி விடுவிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் அவர் 21ம் தேதி விழுப்புரம் வந்து டெல்லி செல்லும் லாரி டிரைவர்கள் இருவருடன் தங்கியிருந்துள்ளார். அவர் கடந்த 6ம் தேதி விழுப்புரம் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.