சென்னை: டிக்டாக் செயலியில் ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் பல வீடியோக்களை தொடர்ந்து பதிவு செய்து வரும் பெண் காவலரின் செயல் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொழுதுபோக்கு செயலியான டிக்டாக் செயலியை பலர் நகைச்சுவையாகவும், அறிவுப்பூர்வமாகவும் மக்களுக்கு நல்ல தகவல்களை வீடியோவாக பதிவு செய்து வருகின்றனர். ஆனால், சிலர் டிக்டாக் செயலியை ஜாதி ரீதியாக பல வீடியோக்களை பதிவு செய்தும், இரு சமூகத்திற்கும் இடையே கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோக்களை பதிவு ெசய்தும் வருகின்றனர். அப்படி ஜாதி ரீதியாக பதிவு செய்து கலவரத்தை தூண்டும் நபர்களை போலீசார் கைது செய்து கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஆனால், தமிழக காவல்துறையில் சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படையில் பணியாற்றி வரும் பெண் காவலர் ஒருவர், ‘டிக்டாக்’ செயலியில் ‘மனோரமணி’ என்ற பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அதில் பெரும்பாலான வீடியோக்கள் தனது சமூகத்தை உயர்த்தியும், மற்ற சமூகத்தை தாழ்த்தியும் அருவருக்கத்தக்க வகையில் மிரட்டும் வகையில் வீடியோக்களை பதிவு வருகிறார்.