தண்டையார்பேட்டை: சவுகார்பேட்டை, ஏழுகிணறு பகுதியை சேர்ந்தவர் ஷெராபாத் அலி (48). இவர், டெல்லி மாநாட்டில் பங்கேற்று சென்னை திரும்பியவர் என்பதால், கடந்த 3ம் தேதி பரிசோதனைக்காக சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனை சென்றார். அங்கு, அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால், சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் காவல்துறையினர் உதவியுடன் இவரது வீட்டின் அருகே உள்ள தெருக்களுக்கு சீல் வைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய பூக்கடை பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர், மண்ணடியில் ஒருவர் மற்றும் முத்தியால்பேட்டையில் ஒருவர் என 5 பேருக்கு கொரோனா இருப்பது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவுவதை தடுக்க தண்டையார்பேட்டை நேதாஜி நகர், வஉசி நகர், வண்ணாரப்பேட்டை காட்பாடா பகுதி, கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் மற்றும் பாரதி நகர் மெயின்தெரு, வியாசர்பாடி நியு மெகஷின் ரோடு உள்ளிட்ட பகுதி சாலைகளும் சீல் வைக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.