சென்னை: விளையாட்டு மைதானத்திற்கு மாற்றியும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத காரணத்தால் தி.நகர் காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், காய்கறி, பால், மளிகைக்கடை உள்ளிட்டவை செயல்படுகின்றன. இங்கு வரும் பொதுமக்கள் பொருட்கள் வாங்கும்போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மீறும் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை மற்றும் புறநகரில் உள்ள பெரும்பாலான காய்கறி மார்க்கெட்டுகள் குறுகிய இடங்களில் செயல்பட்டதால், கூட்ட நெரிசலை தவிர்க்க அந்த மார்க்கெட்டுகள் அருகில் உள்ள பள்ளி, கல்லூரி மைதானம், விளையாட்டு திடல், பஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டன.