ஒரு மாதத்துக்கான மளிகை பொருட்கள் வழங்கி 1 லட்சம் சினிமா தொழிலாளர்களுக்கு அமிதாப் பச்சன் உதவி

சென்னை: ஒரு மாதத்துக்கான மளிகை பொருட்களை 1 லட்சம் சினிமா தொழிலாளர்களுக்கு வழங்குகிறார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன், பல்வேறு மாநிலங்களில் கடனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவர்களின் கடனுக்கான தொகையை ஆண்டுதோறும் செலுத்தி வருகிறார். இதுபோல் பல்வேறு நல உதவிகளை திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கும் அவர் வழங்குகிறார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, கடந்த 15 நாட்களுக்கு மேலாக சினிமா படப்பிடிப்புகள் நடைபெறவில்லை. இதனால் சினிமா தொழிலாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் உதவி புரிந்து வருகிறார்கள். நடிகர் சல்மான் கான், தொழிலாளர்களின் வங்கி கணக்கில் தலா ரூ.5 ஆயிரம் செலுத்தியுள்ளார்.

இப்போது இந்தி மட்டுமின்றி பல்வேறு மொழி திரைப்பட தொழிலாளர்கள் 1 லட்சம் பேருக்கு அமிதாப் பச்சன் உதவி புரிந்துள்ளார். அவர்களின் குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கான மளிகை பொருட்களை அவர் வழங்க ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட மளிகை பொருட்களை தொழிலாளர்களுக்கு வழங்க அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories: