துரைப்பாக்கம்: சென்னை மாநகராட்சி, 15வது மண்டலம், 193வது வார்டுக்கு உட்பட்ட துரைப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவில் தனியாருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த இடத்தில் தகர ஷீட்களால் தற்காலிக குடியிருப்புகளை அமைத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பெருங்குடியில் உள்ள தனியார் நிறுவன கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு சரியான முறையில் அடிப்படை வசதிகள் செய்து தராததால், இவர்கள் தங்கியுள்ள இடத்தில் கழிவுநீர் குளம் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, கொசு தொல்லை அதிகரித்து, தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில், இவர்கள் அனைவரும் சிறிய இடத்தில் கூட்டமாக வசித்து வருவது சுற்றுப் பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர்.