சென்னை: கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக இன்று முதல் 90 நாட்களுக்கு சுகாதாரத்துறையினர் வீடுவீடாக சென்று யாருக்கு காய்ச்சல், சளி, இருமல் இருக்கிறது என்பதை ஆய்வு செய்வார்கள் என்று உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். சென்னையில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு குறித்த கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி பல்வேறு பணிகளை செயல்படுத்தி வருகிறது. இதில் மிக முக்கிய பணியான, மாநகரம் முழுமையிலும், அனைத்து வீடுகளிலும் தினந்தோறும் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமங்கள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அவர்களை சென்னை மாநகராட்சி அம்மக்களை ஆய்வு செய்து, அது சாதாரண சளி மற்றும் காய்ச்சலாக இருப்பின் அதற்கான மருத்துவம் மாநகராட்சியின் மூலம் அளிக்கவும், மேல் சிகிச்சை தேவைப்படின், பொது சுகாதார துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு பொது மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்க சென்னை மாநகராட்சியால் செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு, மாநகரம் முழுவதும் நாளை முதல் செயல்படுத்தப்பட உள்ளது.