போதை படுத்தும் பாடு... சோடாவில் சேவிங் லோஷனைகலந்து குடித்த 3 பேர் பலி

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்தவர் அன்வர்ராஜா (33). பைக் வாங்கி, விற்கும் தொழில் செய்து வந்தார்.  ராமநாதபுரம் மாவட்டம் பேய்க்கரும்பு பகுதியை சேர்ந்தவர் அருண்பாண்டி (27). கோட்டைப்பட்டினத்தில் தங்கி மீன்பிடிக்கும் தொழில் செய்து வந்தார். கோட்டைப்பட்டினம் மீனவர் காலனியை சேர்ந்தவர் அசன்மைதீன் (35). மீனவர். நண்பர்களான மூவரும் ஒன்றாக மது அருந்துவது வழக்கம்.  கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுபானம் கிடைக்காமல் அவதிப்பட்ட நண்பர்கள் சேவிங் செய்த பின்பு முகத்தில் தடவும் லோஷனை வாங்கி சென்று நேற்றுமுன்தினம் இரவு கோட்டைப்பட்டினம் தர்ஹா அருகே அமர்ந்து சோடாவுடன் கலந்து அருந்தியுள்ளனர்.

இதில் மூவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அருண்பாண்டி, அசன்மைதீன் ஆகியோர் உயிரிழந்தனர். அன்வர்ராஜா மேல்சிகிச்சைக்காக  தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு இறந்தார். இதுகுறித்து கோட்டைப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: