சென்னை: சென்னை அருகே தனியார் நிறுவன அதிகாரி, விமானத்தில் பயணம் செய்ததால், கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னை அருகே ஓ.எம்.ஆர்.சாலை கழிப்பட்டூர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் விசாகன் (57). தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 24ம் தேதி விசாகன், கம்பெனி வேலையாக டெல்லிக்கு சென்றார். அன்றைய தினமே அவர், விமானம் மூலம் சென்னை திரும்பினார். 25ம் தேதி அவருக்கு காய்ச்சலுடன், தும்மல், இருமல் ஏற்பட்டது. இதையடுத்து அவர், தன்னிச்சையாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், விசாகனுக்கு கொரோனா அறிகுறி இருப்பதை அறிந்தனர்.