பிளஸ்2 விடைத்தாள் திருத்தும்: பணி மீண்டும் ஒத்திவைப்பு

சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் ஒத்தி வைக்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 24ம் தேதியுடன் முடிந்தன. இதையடுத்து, மார்ச் 31ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணிகளை தொடங்க தேர்வுத்துறை திட்டமிட்டு இருந்தது. இதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 44 மையங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு விடைத்தாள் திருத்தும் பணியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் மார்ச் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், விடைத்தாள் திருத்தும் பணியை ஏப்ரல் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து தேர்வுத்துறை உத்தரவிட்டது. இதற்கிடையே, மத்திய அரசின் அறிவிப்பின்படி ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், ஏப்ரல் 7ம் தேதி தொடங்க இருந்த விடைத்தாள் திருத்தும் பணி ஒத்தி வைக்கப்படுவதாகவும், அந்த பணிகள் தொடங்கும் தேதிகள் குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Related Stories: