தேனி: தேனி புதிய பஸ் நிலையத்தில் தற்காலிகமாக செயல்படும் உழவர் சந்தையில் ரூ.150க்கு காய்கறி தொகுப்பு விற்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க ஊரடங்கு அமலில் இருப்பதால் காய்கறி கடைகள், மளிகைக்கடைகள், பால் விற்பனைக்கடைகள் திறந்திருக்க நேரக் கட்டுப்பாடு காரணமாக சமூக இடைவெளி குறையும் நிலை உள்ளது. சமூக இடைவெளியை ஏற்படுத்தும் வகையில் நெருக்கடியான காய்கறி மார்க்கெட்டுகள் பஸ் நிலையங்கள், விளையாட்டு மைதானங்களுக்கு மாற்றப்பட்டு வருகிறது.தேனி மாவட்டத்தில், தேனி உழவர் சந்தை தேனி புதிய பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு அங்கு காய்கறி விற்பனை நடந்து வருகிறது. தேனி உழவர் சந்தையில் காய்கறி விற்பனையின்போது விவசாயிகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தவிர்க்கும் வகையில் உழவர் சந்தை நிர்வாகம், காய்கறி தொகுப்பினை ஒரு பையில் வைத்து விற்க முடிவு செய்தது.