144 தடை உத்தரவை மீறி வெளிமாவட்டங்களுக்கு செல்ல தன்னிச்சையாக அனுமதி சீட்டு: வடபழனி உதவி கமிஷனர் அதிரடியாக கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்

சென்னை: 144 தடை உத்தரவை மீறி வெளிமாவட்டங்களுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு தன்னிச்சையாக அனுமதி சீட்டு வழங்கி வந்த வடபழனி உதவி கமிஷனரை, போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் அதிரடியாக கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தவை அரசு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து மாநிலம் முழுவதும் 1.20 லட்சம் போலீசார் மாநில மற்றும் மாவட்ட எல்லைகளை மூடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாவட்ட வாரியாக போலீசார் அரசு அனுமதி அளித்த கடைகளை தவிர்த்து மற்ற கடைகளை ஒலி பெருக்கி மூலம் தெரிவித்து மூடி வருகின்றனர்.

இதற்கிடையே பலர் 144 தடை உத்தரவை மீறி பைக் மற்றும் வாகனங்களில் சாலைகளில் தொற்று நோய் பரப்பும் விதமாக சுற்றி வருகின்றனர். போலீசார் அவர்களிடம் பைக் மற்றும் கார்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவும் செய்து வருகின்றனர். இந்நிலையில், ெசன்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்ல அதிகளவில் கார்களில் பயணம் செய்து வருகின்றனர். அவர்களிடம் மாவட்ட எல்லையில் உள்ள போலீசார் விசாரணை நடத்திய போது பலர் வடபழனி உதவி கமிஷனர் பிரகாஷ் கையெழுத்து போட்ட அனுமதி சீட்டை காட்டிவிட்டு பலர் சென்று உள்ளனர். இதில் அதிகளவில் சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கவனத்திற்கு வந்தது. அதன்படி கமிஷனர் வடபழனி உதவி கமிஷனர் பிரகாஷை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அனைவரும் 144 தடை உத்தவை மீறி வெளிமாவட்டங்களுக்கு செல்ல கையெழுத்திட்ட அனுமதி சீட்டு தன்னிச்சையாக கொடுத்தது உறுதியானது. இதையடுத்து உதவி கமிஷனர் பிரகாஷை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.அதேபோல் அனுமதி சீட்டு வழங்க நியமிக்கப்பட்டுள்ள துணை கமிஷனர் தவிர மற்ற யாரும் மக்களுக்கு அனுமதி சீட்டு வழங்க கூடாது என்று உத்தரவும் பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: