ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி 14வது மண்டலத்துக்கு உட்பட்ட புழுதிவாக்கம், மடிப்பாக்கம் போன்ற பகுதிகளில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இங்கு, குடிநீர் வாரியம் சார்பில் சின்டெக்ஸ் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற உபயோகத்திற்கு மக்கள் ஆன்லைனில் பதிவு செய்து, பணம் செலுத்தி ஒப்பந்த லாரிகள் மூலம் தண்ணீர் பெற்றுவந்தனர். இந்நிலையில், ஊரடங்கு அமலுக்கு வந்த நாள் முதல், பொதுமக்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்தாலும் தண்ணீர் வழங்கப்படுவதில்லை, என கூறப்படுகிறது. தினசரி 100க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒப்பந்த லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கிய குடிநீர் வாரியம் தற்போது 10 முதல் 15 பேர் வரை மட்டுமே தண்ணீர் வழங்குவதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் தனியார் லாரி தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலை உள்ளது.