சென்னை: சென்னை மாநகராட்சியில் 24 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமி ஆகியோர் நேற்று ஆய்வு நடத்தினர்.பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
அரசின் உத்தரவுகளை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மக்கள் ஒத்துழைத்தால்தான் கொரோனா பரவுவதை தடுக்க முடியும். சமூக இடைவெளியை பின்பற்றினால் தொற்று குறையும். சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் சம்பந்தமாக 24 மணி நேரமும் தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ளும் வகையில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.
இதற்காக 044-25384520 என்ற சிறப்பு தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு எண்ணிற்கு இதுவரை மருத்துவ தகவல்கள் கேட்டு 2 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன. தன்னார்வளர்கள் தங்களுடைய பொருட்களை பொதுமக்களுக்கு கொடுக்க உதவியாக 044-25384530 என்ற 24 மணி நேரம் இயங்கக்கூடிய தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு, தனிமைப்படுத்தினால் போதாது, அவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்க வேண்டும். இதில் மாநகராட்சி, சுகாதாரத்துறை என அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்படுகின்றன. சென்னை மாநகராட்சியில் இதுவரை 24 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவர்களுடைய வீடுகளில் யாரும் இங்கு போகக் கூடாது என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
வீடற்ற ஆதரவற்றவர்களுக்கான 53 மாநகராட்சி காப்பகத்தில் 2064 பேர் தங்கியுள்ளனர் அவர்களுக்கு சாப்பாடு, தண்ணீர் வழங்கப்படுகிறது. சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ரயில்கள் இயக்கப்படாததால் மாநகராட்சி சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கும் சாப்பாடு, தண்ணீர் வழங்கப்படுகி றது. மீன்வளத்துறை சார்பில் மீனவர்கள் கஷ்டப்படுவதினால் அவர்களுக்கு பிரத்யேகமாக நிவாரணம் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.இவ்வாறு கூறினார்.